சங்கல்பம் - சிவானுபவம் எப்போது சாத்தியம்?
நாம் நமது உரையாடலின் போதும், சத்சங்கத்தின் போதும் வள்ளலார் நமக்கு அருளிய உரைநடை குறித்து மீண்டும் மீண்டும் உணர்த்துவது உண்டு. இதில் நாம் சங்கல்பம் என்ற நிலை பற்றி சிந்திப்போம்.
நம் மனதின் அசைவுகளையும் ஆன்மீக உணர்வுகளையும் ஐந்து முக்கிய நிலைகளாக வள்ளலார் நமக்கு உணர்த்துகிறார்.
புற உலக ஆரவாரங்களில் உள்ளம் சிதறாமல், தூய அக உணர்வில் நிலைத்திருப்பதே பேரின்பத்தை எய்துவதற்கான எளிய வழியாகும் என்று நமக்கு உணர்த்துகிறார்.
ஐந்து நிலைகள்:
- நிர்விகல்பம்: எந்தவித வேறுபாடும் அற்ற தூய பேரறிவு நிலை (கடவுளறிவு).
- சவிகல்பம்: அந்தப் பேரறிவு உலகெங்கும் விரிந்து பரவும் நிலை (அறிவின் வியாபகம்).
- சங்கல்பம்: கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாய் இருந்த காலத்தில் தோன்றிய ஆதி அசைவு; "நாம் நஷ்டமடையோம்" என்ற ஆழ்ந்த உறுதியான பிரக்ஞை (உள்ளழுந்தல்).
- விகல்பம்: அந்த அசைவைத் தொடர்ந்து யோசிக்கும் மன ஓட்டம் (சிந்தித்தல்).
- கல்பம்: சிந்தனையை மேலும் பல கிளைகளாக விரித்து ஆராயும் நிலை (விசாரித்தல்).
சிவானுபவம் எப்போது சாத்தியம்?
நம் அன்றாட வாழ்வில் மனம் பெரும்பாலும் விகல்பத்திலும் கல்பத்திலும் சுழன்று, தேவையற்ற யோசனைகளிலும் ஆராய்ச்சிகளிலுமே சக்தியை வீணடிக்கிறது.
ஆனால், புறக் கரணங்களில் சிக்காமல் "நாம் நஷ்டமடையோம்" எனும் அசையாத நம்பிக்கையுடன், சுத்தமான சங்கல்ப மயமாய் (உள்ளழுந்தல் நிலையில்) நாம் இருக்கும்போது, மனதின் அலைச்சல் முற்றிலும் அடங்குகிறது. இந்த ஆழ்ந்த சங்கல்பப் பிரக்ஞையில் நிலைத்து நிற்கும்போதே திவ்வியமான சிவானுபவம் தானாகக் கைகூடுகிறது.
உரைநடையில் வள்ளலார் ஐந்து இடங்களில் நமக்கு சிவானுபவம் பெறுவதற்கு எளிய வழிகள் தருகின்றார் . அதில் ஒன்றை இன்று சிந்தித்தோம். மேலும் தொடர்வோம்

Comments